ஒரு வருடத்திற்கு இலவசப் பயணமா? : ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு GOOD NEWS!
அரசுப் பேருந்துகளில் கோடைக் கால விடுமுறைக்காக ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்குச் சிறப்புப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு கோடைக் கால விடுமுறைக்காக அரசு பேருந்துகளில் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 1 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளில், 75 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதன்படி முதல் பரிசு வெல்லும் 25 பேர் ஜூலை 1 முதல் 2026ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை அனைத்துவகை அரசு பேருந்துகளிலும் ஓராண்டிற்கு 20 முறை இலவசமாகப் பயணம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ஆம் பரிசாக 25 பேருக்கு ஜூலை 1 முதல் 2026ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை அனைத்துவகை அரசு பேருந்துகளிலும் ஓராண்டிற்கு 10 முறை இலவசமாகப் பயணம் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
3வது பரிசு வெல்லும் 25 பேர் ஜூலை 1 முதல் 2026ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை அனைத்துவகை அரசு பேருந்துகளிலும் ஓராண்டிற்கு 5 முறை இலவசமாகப் பயணம் செய்யலாம் எனப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.