கர்நாடக முன்னாள் டிஜிபி கத்தியால் குத்தி கொலை - எமனாக மாறிய மனைவி!
கர்நாடகாவின் ஓய்வு பெற்ற டிஜிபி ஓம் பிரகாஷ் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த கொலைக்கான பின்னணி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பீகாரில் உள்ள சம்பாரணைச் சேர்ந்த 68 வயதான ஓம் பிரகாஷ், 1981 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாவார். புவியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், ஹரப்பனஹள்ளியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகத் தனது காவல் பணியைத் தொடங்கியுள்ளார். பல்லாரியில் ஏஎஸ்பியாகவும், சிவமோகா, உத்தர கன்னட மற்றும் சிக்கமகளூரு மாவட்டங்களில் எஸ்பியாகவும் பணியாற்றியுள்ளார்.
கர்நாடகா மாநில வீட்டுக் காவல் மற்றும் தீயணைப்பு, அவசர சேவைகள் மற்றும் போக்குவரத்து ஆணையராகவும் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையம், கர்நாடக லோக்ஆயுக்தா மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ள ஓம் பிரகாஷ் கார்வார் மாவட்டத்தின் பட்கல் பகுதியில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரங்களைக் கையாண்ட வகையில் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டவர் ஆவார்.
மேலும், 2015 முதல் 2017ம் ஆண்டு ஓய்வு பெரும் வரை கர்நாடக மாநில காவல்துறை இயக்குநராகவும் இருந்துள்ளார். பெங்களூருவின் ஆடம்பரமான எச்எஸ்ஆர் லே-அவுட் என்ற பகுதியில், மூன்று மாடி வீட்டில் தனது மனைவி பல்லவி மற்றும் மகள் கிருத்தியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மனைவிக்குப் போன் செய்து, தான் ஒரு அரக்கனை கொன்று விட்டதாக ஓம் பிரகாஷின் மனைவி பல்லவி கூறியுள்ளார். பின்னர், பல்லவியே கொலை சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து, காவல்துறையினர், விரைந்து சென்று பார்த்த போது, வீட்டின் தரை தளத்தில் ஓம் பிரகாஷ், கத்திக்குத்து காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். சம்பவம் நடந்த நேரத்தில்,அவரது மனைவி பல்லவி மற்றும் மகள் வீட்டில் இருந்துள்ளனர்.
எந்த வித பதற்றமும் இல்லாமல்,கணவரைக் கொன்று விட்டதாக, பல்லவி தெரிவித்திருக்கிறார். விசாரணையில், ஐபிஎஸ் அதிகாரிகள் குடும்பத்தினர் இருக்கும் வாட்ஸ் ஆப் குரூப்பில் பல்லவி ஒரு அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்திருக்கிறார். அதில், "ஓம் பிரகாஷ் வீட்டில் துப்பாக்கியுடன் சுற்றுவதாகவும், எந்த நேரத்திலும் அவர் தன்னைக் கொன்று விட வாய்ப்புள்ளதாகப் பல்லவி பதிவிட்டுள்ளார்.
இதனால், தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, கணவரைத் தீர்த்துக் கட்டியதாகப் பல்லவி தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாகவே கணவன்- மனைவி இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில், தண்டேலியில் தான் வாங்கிய நிலத்தைத் தனது சகோதரிகள் பெயரில் ஓம் பிரகாஷ் பதிவு செய்ததும், கணவர் மீது பல்லவிக்குக் கோபம் அதிகரித்துள்ளது.
தன் பெயரிலிலோ அல்லது பிள்ளைகள் பெயரிலோ பதிவு செய்யாமல், சகோதரிகள் பெயரில் சொத்தை வாங்கியது ஏன் எனக் கேட்டு, கணவரிடம் தொடர்ந்து பல்லவி சண்டையிட்டு வந்துள்ளார். இது தொடர்பாகவே கொலை நடந்த அன்று, சாப்பிடும் போது மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால், ஆத்திரமடைந்த பல்லவி, ஓம் பிரகாஷைக் கொன்றுள்ளார்.
முதலில், கணவர் மீது மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளார். நிலை தடுமாறிய அவரைக் கட்டி வைத்துள்ளார். பின்னர் குத்தி கொலை செய்துள்ளார். மார்பு, வயிறு மற்றும் கையில் கத்தியால் குத்தியுள்ளார். வயிற்றுப் பகுதியில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட முறை, ஆத்திரம் தீரும் வரை மாறி மாறி குத்தியுள்ளார். 10-க்கும் மேற்பட்ட கத்திகளால் குத்திய பல்லவி கண்ணாடி பாட்டிலாலும் தாக்கியுள்ளார்.
கீழே சரிந்த ஓம்பிரகாஷ் வலி தாங்காமல் சுமார் 20 நிமிடங்கள் துடிதுடித்து இறந்ததாகவும், அதுவரை எந்த பதற்றமும் இல்லாமல், நாற்காலியில் அசையாமல் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததாகவும் காவல்துறை விசாரணையில் பல்லவி தெரிவித்துள்ளார். தனது உயிருக்கு, தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் தெரிவித்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, பல்லவி மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும், நீண்டகாலமாகவே மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்த ஓம் பிரகாஷ், சமீபத்தில் தான் மீண்டும், வீட்டுக்குத் திரும்பியதாகவும் கூறப்படுகிறது. தனது மனைவியின் சித்ரவதைகளைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று மூத்த காவல்துறை அதிகாரிகளிடம் பலமுறை ஓம் பிரகாஷ் கூறியதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஓய்வுப் பெற்ற டிஜிபி ஓம் பிரகாஷின் மரணத்துக்கான உண்மையான காரணமும், எதற்காகக் கொன்றனர் என்பதும் விசாரணையின் முடிவிலும்,பிரேதப் பரிசோதனையின் அறிக்கையின் முடிவிலும் தெரியவரும்.