களைகட்டும் விற்பனை : செல்லப்பிராணிகளை வாங்க குழந்தைகள் ஆர்வம்!
இல்லத்தில் பொம்மைகள் எத்தனை இருந்தாலும் செல்லப் பிராணிகளிடம் குழந்தைகளுக்கு உண்டாகும் பிணைப்பு தனித்துவமிக்கது. அத்தகைய செல்லப் பிராணிகளின் விற்பனை குறித்து அதனை வாங்குவதில் குழந்தைகள் காட்டும் ஆர்வம் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சேலம் மாவட்டம் மணியனூர் சந்தைப் பேட்டையில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை செய்யப்படுவது வழக்கமான ஒன்று.
ஆனால் கடந்த சில வாரங்களாக முயல்கள், எலிகள், கோழிகள், வண்ண மீன்கள், பூனைகள் என ஏராளமான செல்லப் பிராணிகளும் விற்பனைக்கு வந்துள்ளன. கோடை விடுமுறைக் காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்தைக்கு வருகை புரிந்து ஏராளமான செல்லப்பிராணிகளை வாங்கிச் செல்கின்றனர்.
பொதுவாகச் செல்லப்பிராணிகள் வளர்க்கும் பழக்கம் என்பது குழந்தைகளிடையே நேர்மறையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில் சேலம் வாரச்சந்தையில் பேன்சி கோழி, தாய்லாந்து கோழி, ராக்கெட் குருவி, ஆஸ்திரேலியா பூனை, கண்ணூர் கிளி என விதவிதமாக விற்பனைக்கு வந்திருக்கும் செல்லப்பிராணிகளை வாங்கிச் செல்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
பிற உயிர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற மானுட தத்துவத்தை வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. செல்லப்பிராணிகளை வாங்கிச் செல்வதில் செலுத்தும் ஆர்வத்தை அதனைக் கவனமோடு வளர்ப்பதிலும் செலுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.