For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

காஷ்மீரை சுற்றி வளைக்கும் ராணுவம் : பயங்கரவாதிகளை வேரறுக்க களமிறங்கிய NIA!

08:28 PM Apr 29, 2025 IST | Murugesan M
காஷ்மீரை சுற்றி வளைக்கும் ராணுவம்   பயங்கரவாதிகளை வேரறுக்க களமிறங்கிய nia

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எப்படி இந்தியாவுக்குள் நுழைந்தார்கள்? எவ்வளவு காலமாக இந்தியாவில் தங்கி இருந்தார்கள் ?  யார் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள்?  என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.

காஷ்மீர் பகல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, இந்து என்று உறுதி செய்தபின், நிராயுத பாணியாக நின்ற 26 சுற்றுலாப் பயணிகளைப் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்  சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடந்த இடத்திலிருந்து, AK-47 மற்றும் M-14 CARPINE ரகத் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் பயங்கரவாதிகளின் ஓவியங்களை வரைந்து பாதுகாப்புப் படையினர்  வெளியிட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த அடில் உசேன் தோக்கர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஷிம் மூசா மற்றும் அலி பாய் ஆகிய பயங்கரவாதிகளே தாக்குதலுக்குக் காரணம் என்று அடையாளம் காணப் பட்டுள்ளது.

Advertisement

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய மூசாவும், அலியும் சுமார் இரண்டு ஆண்டுகளாகக் காஷ்மீரில் சுற்றி நோட்டம் பார்த்து வந்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு  வழிகாட்டியாக அடில் உசேன் தோக்கர் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு, சம்பா மற்றும் கதுவா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த மூசா, கிஷ்த்வார் நகருக்கு இடம்பெயர்ந்துள்ளார். பிறகு ஸ்ரீநகருக்கு அருகில் உள்ள புட்காம் மாவட்டத்தில் தங்கியதாகக் கூறப் படுகிறது.

மூசாவுக்குப் பிறகு இந்தியாவுக்குள் ஊடுருவிய அலி  ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள டச்சிகாம் காடுகளில் பதுங்கி இருந்துள்ளான். அடர்ந்த மலைக் காடுகளாக விரிந்து கிடக்கும்  டச்சிகாம் காடுகள், பகல்காம் பள்ளத்தாக்குகளுடன் இணைந்துள்ளன. இந்த இரண்டு பயங்கரவாதிகளுடன் இணைந்து,பகல்காம் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியது, உள்ளூரைச் சேர்ந்த அடில் உசேன் தோக்கர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஸ்ரீநகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில்  உள்ள பிஜ்பெஹாராவில் உள்ள குர்ரே கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரியான அடில் உசேன் தோக்கர், கல்லூரியில் படிக்கும் காலத்தில், இஸ்லாமிய மத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தார்.

இந்திய ராணுவத்தினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளில் தவறாமல் கலந்து கொண்ட  அடில் உசேன் தோக்கர், கடந்த 2018ம் ஆண்டு, தனது வீட்டை விட்டு வெளியேறி, மாணவர் விசாவில் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.

பாகிஸ்தானுக்குச் சென்றவுடன், தம் குடும்பத்துடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்துவிட்டு, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான  லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளிடம்  ஆயுதப் பயிற்சி எடுத்துள்ளார்.

இந்தியாவுக்குள் நுழைய உதவிய காஷ்மீர் தொழிலாளர்கள் மூலமாகவே ஆயுதங்களையும் பயங்கரவாதிகள் கடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்தவுடன்,  கோகர்நாக் முதல் பகல்காம் வரை 22 மணி நேரம் கடுமையான பயணத்துக்குப் பிறகு, பைசாரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்துள்ளனர்.

ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவு அருகிலுள்ள சாலைப் பாதையைப் பாதுகாப்புப் படையினர் அடைய சுமார் 45 நிமிடங்கள் ஆகும் என்றும், அங்கிருந்து பைசரனை அடைய இன்னும் 5 நிமிடங்கள் ஆகும் என்றும், மத்திய   CRPF படையினர் வந்து சேரவும்  குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும் என்றும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கணக்கிட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பகல்காம் பயங்கர வாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்பி ஓடி, பூஞ்ச்-ரஜோரி,தோடா, கிஷ்த்வார் உள்ளிட்ட அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.  பயங்கரவாதிகளைப் பிடிக்கப் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், அடில் உசேன் தோக்கரின் வீடு, IEDகளைப் பயன்படுத்தி வெடிக்க வைக்கப்பட்டது.  வீட்டுக்குள் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும்  லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஷாஹித் அகமது குட்டே உட்பட நான்கு பயங்கவாதிகளின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளன.

ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) ஆகிய மூன்று முக்கிய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 14 பயங்கரவாதிகள் அடையாளம் காணப் பட்டுள்ளனர். அதில், மூன்று பேர் ஹிஸ்புல் முஜாஹிதீனுடனும், எட்டு பேர் லஷ்கர்-இ-தொய்பா உடனும்,மூன்று பேர் ஜெய்ஷ்-இ-முகமது உடனும் தொடர்புடையவர்கள் என்று கூறப் பட்டுள்ளது.

இந்த 14 பயங்கரவாதிகளுக்கும் பகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பயங்கரவாதிகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் கண்டறியும் பணியில் தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக இறங்கியுள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நெட்வொர்க்கை முற்றிலுமாக அழிக்கும் நடவடிக்கைகளில்  தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக இறங்கியுள்ளது. பயங்கரவாதிகள் பூமியில் எங்கு ஒளிந்து கொண்டாலும்,தேடிப் பிடித்து, தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் மோடியின் சபதம்  விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Tags :
Advertisement