குறைந்த செலவில் சூழல் சுற்றுலா - சுற்றுலா தலமாகும் பரளிக்காடு!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பரளிக்காடு கிராமம் தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக்க மாறி வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் சூழலுடன் குறைந்த செலவில் நாள் முழுவதும் சுற்றிப்பார்க்கும் இடங்கள் அடங்கிய இந்த சூழல் சுற்றுலாவை இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தமிழகம் மற்றும் கேரள வனப்பகுதிகளை இணைக்கக் கூடிய அடர் வனத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் மலைக் கிராமமான பரளிக்காடு தான் தற்போதைய சுற்றுலாப்பயணிகளின் விருப்பத்திற்குரிய இடமாகத் திகழ்ந்து வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் இருக்கும் இப்பகுதியில் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மட்டும் நடத்தப்படும் சூழல் சுற்றுலாவுக்குப் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
குறைந்த செலவில் நாள் முழுவதும் வனப்பகுதியில் எழில் கொஞ்சும் இயற்கையுடன் உலாவும் சூழலை அனுபவிக்க விரும்பி வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு வரவேற்பு தேநீரில் தொடங்கி படகு சவாரி, பவானி ஆற்றில் குளியல் எனப் புதுவித அனுபவங்களை இந்த சூழல் சுற்றுலா ஏற்படுத்தித் தருகிறது.
மலைவாழ் மக்களின் உதவியோடு மேற்கொள்ளப்படும் படகு சவாரியின்போது கரையின் இருபுறங்களிலும் வானுயர நிமிர்ந்து நிற்கும் மரங்கள், செடி, கொடிகளோடு வனவிலங்குகளும் தென்படுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும் இந்த சுற்றுலாவில், இயற்கையின் கொடையாக உள்ள ஆறுகள் மற்றும் மரங்கள் குறித்து விழிப்புணர்வும் வழங்கப்படுகிறது.
இந்த சூழல் சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர், காரமடை வனச்சரக அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சூழல் சுற்றுலாவுக்கான கட்டணமாகச் சிறுவர்களுக்கு 500 ரூபாயும், பெரியவர்களுக்கு 600 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பெறக்கூடிய கட்டணங்கள் அனைத்தும் அங்கிருக்கும் மலைவாழ் மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்படுவது அனைவராலும் வரவேற்கக் கூடியதாக அமைந்துள்ளது.