தமிழகத்தில் அனுமதியின்றி இயங்கும் மழலையர் பள்ளிகள் - குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி!
தமிழகத்தில் சுமார் 3000 மழலையர் பள்ளிகள் அரசின் உரிய அனுமதியின்றி இயங்கி வருவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் நடைபெற்ற துயரச்சம்பவங்கள் இனிவரும் காலங்களில் தொடராமல் தடுக்க உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால் தான் பொருளாதாரத்தை ஈடு செய்ய முடியும் என்பதால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை PLAY SCHOOL மற்றும் DAY CARE CENTRE-ல் சேர்க்கும் நடைமுறை அண்மைக்காலமாகவே பெருகிவருகிறது. அவ்வாறு சேர்க்கப்படும் மழலைப்பள்ளிகளில் ஒன்றான மதுரையில் இயங்கிவரும் தனியார் மழலைப்பள்ளியில் பயின்ற குழந்தை ஒன்று தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை உயிரிழப்புக்குப் பின் நடைபெற்ற ஆய்வில் அப்பள்ளி அரசின் விதிமுறைகளுக்கு மாறாகவும் உரிய அனுமதியை பெறாமல் கோடை வகுப்புகளை நடத்தி வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பள்ளியின் தாளாளர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், இந்த துயரச் சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள மழலையர் பள்ளிகளின் தரத்தையும் அதில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இயங்கிவரும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான மழலையர் பள்ளிகளில் சுமார் 3 ஆயிரம் மழலையர் பள்ளிகள் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த பட்சம் 5.5 செண்ட் இடம், கட்டட வசதி, வகுப்பறை வசதி, நிர்வாக அனுமதி, தீயணைப்பு வசதிக்காக பல்வேறு துறைகளிடமிருந்து அனுமதி பெற வேண்டிய நிலையில், விதிகளை பின்பற்றாமல் விளம்பரங்களால் மட்டுமே பல பள்ளிகள் இயங்கி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் 64 மழலையர் பள்ளிகளில் 25 பள்ளிகள் மட்டுமே உரிய அனுமதியோடு இயங்கி வருவதாகவும், மற்ற பள்ளிகளுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதாகவும் மாநில தனியார் பள்ளிகள் சங்கம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது
மழலைப் பள்ளிகளில் இதுபோன்ற துயரச்சம்பவங்கள் நடைபெற்ற பின் அதற்கான காரணங்கள் குறித்து ஆராயாமல், தமிழகம் முழுவதும் உள்ள மழலையர் பள்ளிகளில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.