For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

திருவிழாக்களின் திருவிழா - மதுரை சித்திரை திருவிழாவின் சிறப்பு!

06:05 AM Apr 29, 2025 IST | Murugesan M
திருவிழாக்களின் திருவிழா   மதுரை சித்திரை திருவிழாவின் சிறப்பு

திருவிழாக்களின் தலைநகரம் மதுரை என்றால், சித்திரைத் திருவிழாவைத் திருவிழாக்களின் திருவிழா என்றுதான் அழைக்க வேண்டும். உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழாவின் சிறப்பு பற்றி விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

மதுரை சித்திரைத் திருவிழா- சாதி, இனம், மொழி, மதம் கடந்து எல்லாத் தரப்பு மக்களும் மீனாட்சியின் பக்தர்களாகக் கலந்துகொள்ளும் ஒரு  பண்பாட்டுப் பண்டிகையாகும்.

Advertisement

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டும் ஆண்டில் 280 நாட்களுக்கும் மேலாகத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அவற்றில் மகுடம் வைத்தது போல நடக்கும் திருவிழா தான் சித்திரைத் திருவிழா.

சித்திரைத் தேரோட்டத்தையும் , கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையும் காண லட்சக் கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் கூடுகிறார்கள். இந்தியாவில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக சிறப்பு வாய்ந்ததாக  சித்திரைத் திருவிழா அமைந்திருக்கிறது.

Advertisement

ஒருகாலத்தில், மீனாட்சி திருக்கல்யாணம் தைப்பூசத் தன்றும் ,மீனாட்சி பட்டாபிஷேகம் மற்றும் தேரோட்டம் மாசி மாதத்திலும் நடைபெற்று வந்தன . சைவர்கள் மீனாட்சி திருக்கல்யாணத்தை விமர்சையாக கொண்டாடி வந்தார்கள்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் சித்திரை மாதம் நடைபெற்று வந்தது. கள்ளழகர் சோழவந்தான் அருகில் தேனூர் என்ற இடத்தில் தான்  முதலில் ஆற்றில் இறங்கினார்.  வைணவர்கள் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்தைக் கொண்டாடி வந்தனர்.

வைணவராக இருந்தாலும் மதுரை மீனாட்சியம்மன் மீது பேரன்பு கொண்ட திருமலைநாயக்கர் ஆட்சிக் காலத்தில், வைகையாற்றில் இறங்கிக் கொண்டிருந்த கள்ளழகரையும், மாசியில் மதுரையில் நடைபெற்ற திருக்கல்யாணத்தையும் ஒருங்கிணைத்து சித்திரை மாதம் ஒரே திருவிழாவாகக் கொண்டாடும் நடைமுறையைக் கொண்டுவந்தார்.

சோழவந்தான் அருகேயுள்ள தேனூர் எனும் இடத்துக்குச் சென்று வந்து கொண்டிருந்த கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை , மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து மதுரைக்கு வரும்படி திருமலை நாயக்கர் மாற்றியமைத்தார்.

வண்டியூர் அருகே மண்டூக முனிவருக்குப் பெருமாள்  சாப விமோஷனம் கொடுத்தார் என்பது வரலாறு. எனவே இன்றும், மண்டூக முனிவர் சாப விமோசனம் நடைபெறும் மண்டபத்தின் பெயர் 'தேனூர் மண்டபம்' எனப்படுகிறது.

மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், மீனாட்சி பட்டாபிஷேகம், எதிர்சேவை, கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல், தசாவதாரம், பூப்பல்லக்கு என ஒட்டு மொத்த தூங்கா மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும் அழகே அழகு.

பட்டாபிஷேகம் செய்யப்பட்ட மீனாட்சி, தான் முடிசூடிய பிறகு திக் விஜயம் மேற்கொண்டு நகருக்குள் பவனி வருவது திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்வாகும்.

மதுரையை தவிர வேறு எந்த ஊரிலும் பெண் தெய்வம் முடிசூடி, திக்விஜயம் செய்யும் வழக்கம் கிடையாது. பாண்டியர்களின் குலதெய்வம்  மீனாட்சி என்பதால், மதுரையின் அரசியாக 8ம் நாளில் முடிசூடி பாண்டியர்களின் சின்னமாக இருக்கக்கூடிய வேப்பம்பூ மாலையைத் சூடிக் கொண்டு உலா வருவது குறிப்பிடத்தகுந்த வரலாற்றுச் சின்னமாக உள்ளது.

தன் தங்கை மீனாட்சியின் திருமணத்துக்காகச்  சீர்வரிசைகளுடன், அழகர் கோயிலிலிருந்து மதுரை நோக்கி  அழகர் கோயில் பெருமாள் கிளம்புகிறார்.

ஒரு கையில் வளரித்தடி, மற்றொரு கையில் சாட்டைக்கம்பு, வித்தியாசமான கொண்டை, தலையில் உருமால், கல்வைத்த கடுக்கன் எனக் கண்ணுக்கு அழகாகப் பெருமாள் காட்சி அளிக்கிறார்.

மேலும், காங்கு எனப்படும் கருப்பு புடவையே  கணுக்கால் தொடங்கி இடுப்பு வரை அரையாடையாகவும், அதுவே மேலாடையாகவும் சுற்றப்பட்டிருக்கும் இந்த கோலத்தையே கள்ளழகர் திருக்கோலம் ஆகும்.

கள்ளழகர் வருவதற்கு முன்னரே மீனாட்சியின் கல்யாணம் முடிந்து விட்டதால், கோபம் கொண்டு, வைகையாற்றில் இறங்கிக் குளித்து விட்டு வண்டியூர் சென்று விடுகிறார். அன்றிரவு அங்குள்ள பெருமாள் கோயிலில் கள்ளழகர்  தங்குகிறார்.

மதுரை மீனாட்சி அம்மை வரலாறே அற்புதமானது.மதுரையை ஆண்டு வந்த மலையத் துவச மன்னனும் அவரது மனைவி காஞ்சன மாலையும் மகப்பேறு வேண்டி, சிவபெருமானை வழிபட்டு வந்தனர். பிரம்மாவின் அறிவுரைப் படி, இறைவனை நோக்கி, வேள்வி செய்தனர். உண்மையான அடியார்களுக்கு அருளும் உமையம்மை, 3 தனங்களை உடைய பெண் குழந்தையாக யாக குண்டத்தில் தோன்றினாள்.

குழந்தை வந்ததைக் கண்டு மகிழ்ந்த  மன்னனும் அவர் மனைவியும் , குழந்தையின் உருவம் கண்டு மனம் வருந்தினர். இக்குழந்தைக்குத் தடாதகை என்று பெயரிட்டு வளர்த்து வா என்றும், தனக்கேற்ற கணவனை இக்குழந்தை காணும் போது மிகுதியாக இருக்கும் தனம் மறைந்து விடும் என்றும்  சிவபெருமான் அசரீரியாகக் கூறினார்.

கல்வி கேள்விகளில் சிறந்து வீரம் மிக்கவளாக விளங்கிய தடாதகை பாண்டி நாட்டின் அரசியானாள் செங்கோல் வழுவாமல் அரசாண்டு வந்தாள். நாட்டை விரிவுபடுத்த எண்ணி, படையோடு கிளம்பினாள். பல குறுநில மன்னர்களின் மீது போர் தொடுத்து வென்ற தடாதகை , கயிலைய மலையை அடைந்து போர் தொடுத்தாள். தடாதகையை எதிர்த்த நந்தி தேவர் படைகளும் பூதப் படைகளும் தோல்வி அடைந்தன.

சிவபெருமானே போர் கோலம் பூண்டு வந்தான். ஈசனைக் கண்டதும், நாணித் தலைகுனிந்தாள் தடாதகை . அவளின் மூன்று தனங்களில் ஒரு தனம் மறைந்தது. இறைவனே தனக்குரிய கணவன் என்று தடாதகை  அறிந்தாள்.

நீ மதுரைக்குச் செல், இன்றிலிருந்து எட்டாம் நாள், மதுரைக்கு வந்து உன்னை மணம் புரிவோம் என்று ஈசன் அருளினான். அதே போல் , சிவபெருமான் மதுரைக்கு வந்து ஒரு பங்குனி உத்தர நாளில் தடாதகையைத் திருமணம் செய்தருளினார்.  சுந்தர பாண்டியன் என்ற பெயரோடு மதுரையை ஆண்டு வந்த இறைவன், உக்கிரா குமார பாண்டியனுக்கு முடி சூட்டி விட்டு , மீனாட்சி சுந்தரேஸ்வரராக எழுந்தருளி இன்றும் நாடி வரும் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்கள்.

மீனாட்சி அம்மனின் திருமேனி சிலை மரகதக் கல்லால் ஆனதாகும். திருக்கோயில் கருவறை தேவேந்திரனால் அமைக்கப்பட்டதாகும். பிறகு  முழுக்கோயிலும் குலசேகர பாண்டியனால் கட்டப் பட்டதாகும். மீனாட்சி அம்மனுக்குப் பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு இக்கோயிலில், சுந்தரேஸ்வரருக்குப் பூஜைகள்  நடத்தப்படுகிறது.

சங்ககாலம் தொடங்கி இன்றுவரை தொடரும் தமிழ்ச் சமய பண்பாட்டின் அடையாளமாக நடக்கும் சித்திரைத் திருவிழா இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இப்போது, பக்தியில் பரவசமாகத் தயாராகி விட்டனர் பக்தர்கள்.

Advertisement
Tags :
Advertisement