For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

தேசிய உணர்வே உண்மையான வளர்ச்சி : ஸ்ரீதர் வேம்பு பளிச் பதிவு!

09:05 PM Apr 22, 2025 IST | Murugesan M
தேசிய உணர்வே உண்மையான வளர்ச்சி   ஸ்ரீதர் வேம்பு பளிச் பதிவு

சீனாவை எதிர்த்துப் போட்டியிட விரும்பினால், அந்நாட்டின் 100 ஆண்டுக் கால வரலாற்றில் இருந்து இந்தியா  படிப்பினையை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவில் தேசிய மனநிலையில் மறுமலர்ச்சிக்கான மாற்றம் ஏற்பட வேண்டும் என்று ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார்.  அது பற்றி இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

முன்னணி தொழில் நுட்ப நிறுவனமான ஜோஹோவின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகிய ஸ்ரீதர் வேம்பு, அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுத் துறையில் முழுமையான கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

சமூக ஊடகங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஸ்ரீதர் வேம்பு, தனது எக்ஸ் பதிவில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக கவனம் செலுத்துவதை விட  இந்தியாவின் மறுமலர்ச்சிக்கான மாற்றத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பொருளாதாரத்தை வளர்ப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல், நாட்டின்  சிறந்த நாகரிகத்தை மீட்டெடுப்பது என்று தேசிய திட்டத்தை முன் வைத்தே சீனா  செயலாற்றி வருகிறது.

Advertisement

இந்தியாவைப் பொறுத்தவரை, பொருளாதார வளர்ச்சி குறித்த விவாதங்கள் நாட்டின் தேசிய கலாச்சாரத்தின் தேவையை மறக்க வைத்து விடுகின்றன. பாரம்பரியம் மிக்க பண்டைய பண்பாட்டின் வாரிசுகளாக மக்கள் தங்களை உணரும் போது தான் உண்மையான தேசிய மறுமலர்ச்சி ஏற்படுகிறது.

இந்தியா தனது சொந்த உற்பத்தித் துறைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஸ்ரீதர் வேம்பு, பொருளாதார வளர்ச்சிக்கான சீனாவின் படிப் படியான அணுகுமுறைகளில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 100 ஆண்டுக்கால சீன வரலாற்றில், மாவோ சேதுங்கின் புரட்சி, கலாச்சாரப் புரட்சி, நாட்டை கலைத்துப் போட்டன. மேலும் நாட்டின் பசி பட்டினியால் மட்டுமின்றி, உள்நாட்டு அரசியல் மாற்றத்தால் பல மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இத்தனை துயரமும், வேதனையும்,தேசத்துக்கான தியாகத்துக்கு வழி வகுத்தது என்றும், இத்தனைக்கும் இடையே சீனா தன்னை மீண்டும் கட்டியெழுப்பியது.

உத்வேகம் தரும் சீனாவின் வரலாற்றைக் கற்றுணர வேண்டும் என்றும், அதனை இந்தியாவின் தேவைக்கேற்ப மாற்றுவதன் முக்கியத்துவத்தையும் ஸ்ரீதர் வேம்பு விளக்கியுள்ளார்.   சிந்தனையில் ஏற்படும் மாற்றம் சகிப்புத்தன்மை உருவாக்க முடியும் என்று நம்புவதாகக் கூறியுள்ள அவர்,  எவ்வளவு கடினமாக இருந்தாலும், நீண்டகால மாற்றத்துக்குத் தேவையான மன உறுதியையும் சகிப்புத்தன்மையையும் நாடு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவின்  ஐடி துறையின் எதிர்காலம் குறித்தும் ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பங்கை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுத்திருக்கும்  ஸ்ரீதர் வேம்பு,  உலக ஜாம்பவான்களின் back office ஆக இருப்பதை நிறுத்திவிட்டு, உள்நாட்டிலேயே கணினி தொழில் நுட்பத்தை மேம்படுத்த  வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாக, இந்தியா போன்ற நாடுகள், மென்பொருள் ஏற்றுமதியைச் சுற்றியே  தங்கள் பொருளாதாரங்களைக் கட்டமைத்துள்ளன. குறிப்பாக, திறமையின்மையை இயல்பாக்குவதையே இந்திய ஐடி துறை வளர்த்துள்ளது.

இரண்டு பேர் கொண்ட குழு, 20 பேர் கொண்ட குழுவை விடச் சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற நிலையிலும், நிலையான டாலர் வருமானம் என்பதால்  இந்திய நிறுவனங்கள் மொத்தமாக நிறைய ஊழியர்களைப் பணியமர்த்திக் கொண்டே இருந்தன. செயற்கை நுண்ணறிவின் வருகையால், மென்பொருள் தொழில்நுட்பத் துறையில்  தலைகீழ் மாற்றங்கள் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில்,அடுத்த 30 ஆண்டுகள் கடந்த காலத்தைப் போல இருக்காது என்று குறிப்பிட்டுள்ள ஸ்ரீதர் வேம்பு, தொழில்துறைத் தலைவர்கள் தங்கள் அனுமானங்களை மறு ஆய்வு செய்து, சவால்களைச் சமாளிக்கும் உத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொழில்துறையில் மட்டுமல்ல, அடையாளத்திலும் ஒரு ஆழமான திருப்புமுனையின் விளிம்பில் நாடு இருப்பதாகக் கூறியுள்ள ஸ்ரீதர் வேம்பு, கடினமாக உழைப்பதற்கு மட்டுமல்ல நீண்ட தொலைநோக்குப் பார்வையுள்ள கனவை நிஜமாக்க,தேசிய  மனநிலையில், பாரத பாரம்பரியம் சார்ந்த சிந்தனை மாற்றம் வரவேண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement
Tags :
Advertisement