தேமுதிகவில் புதிய பொறுப்பு : இளைய கேப்டன் விஜயபிரபாகர்!
விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகருக்கு தேமுதிக இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கி அக்கட்சியின் செயற்குழு பொதுக்குழு அறிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜயபிரபாகருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு குறித்தும் அவர் முன் இருக்கும் சவால்கள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரையைப் பதித்ததோடு, தன் மானசீக குருவான எம்.ஜி.ஆரை பின்பற்றி 2005 ஆம் ஆண்டு தேமுதிகவைத் தொடங்கிய விஜயகாந்த் தனக்கான வாக்குவங்கி சதவிகிதத்தை நிரூபித்துக் காட்டியதோடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்தார். அடுத்தடுத்து அரசியலில் உச்சம் தொடுவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்திற்கு அவரது உடல்நிலை பெரும் முட்டுக்கட்டையாக அமைந்தது.
விஜயகாந்த் மறைவுக்கு பின் அவருக்கு அஞ்சலி செலுத்தக் கூடிய கூட்டம் மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. விஜயகாந்த் மறைவுக்குப் பின்பு கட்சியைத் தலைமையேற்று நடத்தும் பொதுச்செயலாளர் பொறுப்பை பிரேமலதா விஜயகாந்த் ஏற்றுக் கொண்டார்.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்து செயல்பட முடிவு செய்த போதே, விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற குரல் எழத்தொடங்கியது.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் திரைத்துறைக்குள்ளாக நுழைந்துவிட, மூத்த மகள் விஜயபிரபாகரன் அவ்வப்போது கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்வுகளில் பங்கேற்றுச் சிறப்பித்துக் கொண்டிருந்தார்.
கட்சிப்பணியாற்றிக் கொண்டிருந்த விஜயபிரபாகரை முழுநேர அரசியலுக்குள் கொண்டு வரக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முக்கிய காரணமாக அமைந்தது.
அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட விருதுநகர் தொகுதியில் போட்டியிட விஜயபிரபாகருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. விஜயகாந்தின் முகம், இளமைப் பருவம், பட்டிதொட்டியெங்கும் மேற்கொண்ட பிரச்சாரம் என விஜயபிரபாகருக்கு ஆதரவான அலையே விருதுநகரில் வீசியது.
தேர்தல் முடிவு நாளில் பிற்பகல் வரை முன்னிலையில் இருந்த விஜயபிரபாகரன் இறுதியில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.
அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி தழுவினாலும் விஜயபிரபாகரின் தோல்வி கட்சியினர் மத்தியில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியிலும் அவருக்கான ஆதரவு அலைகளை உருவாக்கியது.
விஜயபிரபாகருக்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என விஜயகாந்த் மறைவுக்குப் பின் எழுந்த குரல், மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் மீண்டும் வலுவாக எழத் தொடங்கியது. அதற்கு ஏற்ற வகையில் கட்சி கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்று தொண்டர்களை உற்சாகப்படுத்தியதோடு, ஆளுங்கட்சிக்கு எதிரான விமர்சனங்களை ஆக்ரோஷமாகவும் முன்வைக்கத் தொடங்கினார் விஜயபிரபாகர்.
ஒருகாலத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி என்ற அந்தஸ்திலிருந்த தேமுதிக தற்போது படிப்படியாக தன் வாக்கு வங்கியை இழந்திருப்பதோடு, தனித்து போட்டியிட முடியாத அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.
இந்த நேரத்தில் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் தருமபுரியில் நடைபெற்ற தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் விஜயபிரபாகருக்கு அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கட்சியில் பெரும்பாலான இளைஞர்களை இணைத்து களம் காண்பதோடு, தொடர் வீழ்ச்சியில் இருக்கும் தேமுதிகவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சவாலும் விஜயபிரபாகர் முன் இருக்கிறது. புதிய பொறுப்பில் கட்சியில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் விஜயபிரபாகர் தன் தந்தையைப் போலவே சவால்களைத் தகர்த்தெறிந்து முன்னேறுவாரா என்பதை அவரின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் பார்க்கலாம்.