ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு பயந்து ஆற்றில் குதித்த இளைஞர் பலி!
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஒப்புக்கொண்ட காஷ்மீர் இளைஞர், பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க எண்ணி ஆற்றில் குதித்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இம்தியாஸ் அகமது மக்ரே என்ற இளைஞர், தீவிரவாதிகளுக்கு உணவு மற்றும் அடைக்கலம் கொடுத்ததாக பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குல்காமின் டாங்மார்க் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு, உதவியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தீவிரவாதிகளின் பதுங்கிடத்தை காண்பிப்பதாக அவர் அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினரை காட்டிற்குள் அழைத்துச் சென்ற அவர், பாதுகாப்புத் துறையினரிடம் இருந்து தப்ப எண்ணி வேஷா ஆற்றில் குதித்துள்ளார். அப்போது பாய்ந்தோடிய நீரில் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். பாதுகாப்புத் துறையினரே மக்ரேவை கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் தானாகவே ஆற்றில் குதித்து தப்ப முயன்ற வீடியோ வெளியாகியுள்ளது.