"மண் ஆணி" திட்டம் : நிலச்சரிவை தடுக்க புதிய முயற்சி - சிறப்பு தொகுப்பு!
மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் நிலச்சரிவை தடுக்க மண் ஆணி எனப்படும் புதிய தொழில்நுட்பத்தை நெடுஞ்சாலைத் துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...
கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு செல்ல கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய இரண்டு மலைச் சாலைகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதிக்குள் பயணிக்கும் இந்த சாலைகளில், மழைக் காலங்களில் மண் அரிப்பால் நிலச்சரிவு ஏற்படுவதும், அதனால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்குவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்த இன்னல்களை போக்கும் விதமாக மண் அரிப்பால் நிலச்சரிவு ஏற்படும் என கண்டறியப்பட்ட இடங்களில், புதிய தொழில்நுட்பமான "SOIL NAIL" எனப்படும் மண் ஆணியை நெடுஞ்சாலைத்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.
1973-ம் ஆண்டு பிரான்சில் முதல்முதலாக தொடங்கப்பட்ட இந்த SOIL NAIL திட்டம், அதன் பின் 1976-ல் அமெரிக்கா வரை விரிவடைந்தது. ஏற்கனவே இந்தியாவின் எல்லையோர பகுதிகளான அருணாச்சல பிரதேசம், உத்தராஞ்சலில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
டெல்லி ஐஐடி தொழில்நுட்ப பேராசிரியர்களின் ஆலோசனையின் பேரில் கடந்த 2023-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆய்வு செய்யப்பட்ட இந்த புதிய தொழில்நுட்பம், நீலகிரி மலைப்பகுதிகளில் முதன்முறையாக தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மண்ணின் தன்மை குறித்து முதலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மண்ணின் பிடிப்பிற்கு தகுந்தவாறு 3 மீட்டர் முதல் 20 மீட்டர் வரையிலான இரும்பு குழாய்கள் ஹைட்ராலிக் தொழில்நுட்பம் மூலம் மண்ணுக்குள் பொருத்தப்படுகின்றன. சீரான இடைவெளியில் செலுத்தப்பட்ட இரும்பு குழாய்களுக்குள் பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட சிமெண்ட் கலவைகள் ஊற்றப்படுகின்றன.
இது நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் தூண்களைப்போல் செயல்பட்டு, மண்ணின் உறுதித்தன்மையை பலப்படுத்தி மண் அரிப்பை தடுக்க உதவும் விதமாக வடிவமைக்கப்படுகிறது.
தொடர்ந்து மற்றொரு தொழில்நுட்பம் மூலம் அதில் புற்கள் முளைக்க வழிவகை செய்யப்பட்டு, அமெரிக்கா மற்றும் சீன நாடுகளில் மட்டுமே கிடைக்கும் 'HYDRO SEED' என்ற புல் விதைகள் அதன் மீது தூவப்படுகின்றன. இரண்டு அடுக்குகளாக புற்கள் முளைக்க இடைவெளிவிட்டு கம்பி வலைகள் மூலம் அப்பகுதிகள் மூடப்படுகின்றன.
தொடர்ந்து அப்பகுதியில் தண்ணீர் பாய்ச்சி குறிப்பிட்ட அளவு புற்களை வளரச்செய்வதன் மூலம், அதன் வேர்கள் அடிவரை சென்று மண் ஆணிகளை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, குறிப்பிட்ட பகுதிகளில் மழைநீர் ஊடுருவி வழிந்தோட ஏதுவாக தனித்தனி குழாய்களும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.
பருவநிலை மாற்றத்தாலும், மண்ணின் தன்மையாலும் இயல்புநிலைக்கு மாறுபட்ட சூழலை ஏற்படுத்தும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில், நெடுஞ்சாலைத் துறையினர் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேற்கொண்டுள்ள இந்த முயற்சி எந்த அளவிற்கு பலன் தரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.