மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் கடந்தாண்டு ஜூன் வரை நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் எத்தனை? என்பது தொடர்பான விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகர காவல் ஆணையருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு நலச் சங்க கூட்டத்தில் வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து புகாரளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வானமாமலை வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் மனுவுக்குப் பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.
அதைத்தொடர்ந்து, சென்னை நகரில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் குறித்து ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநகர காவல் ஆணையர் அருணுக்கு உத்தரவிட்டார்.