முத்திரை பதித்த முருகர் மாநாடு!
லட்சக்கணக்கான பக்தர்கள்... பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்... விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம்.. என மதுரை மாநகரையே அதிரச் செய்துள்ளது இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாடு.
மதுரையில் கடந்த மாதம் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவையே மிஞ்சும் அளவுக்கு மிகப் பிரம்மாண்டமாக இம்மாநாடு நடந்து முடிந்துள்ளது.
மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா திடலில் 2 வாரங்களுக்கு முன்பே மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. அங்கு அறுபடை வீடுகள் போன்று கோயில் மாதிரிகள் அமைக்கப்பட்டது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அவற்றைக் கண்டு தரிசிக்கக் கடந்த ஒரு வாரமாகவே நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அம்மா திடலுக்கு வந்து வண்ணம் இருந்தனர். அத்துடன் நாள்தோறும் மாதிரி கோயில்களுக்குச் சிறப்பு ஆராதனைகளும் நடத்தப்பட்டன.
கடந்த பிப்ரவரி மாதம் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபோது இந்து முன்னணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. போராட்டம் அறிவிக்கப்பட்டதுதான் தாமதம் உடனடியாக தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் திருப்பரங்குன்றத்தை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினார். இதனால், அதிர்ந்துபோன தமிழக அரசு மதுரை மாநகர் முழுவதுமே 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால், ஊரடங்கு உத்தரவைச் சிறிதும் சட்டை செய்யாத முருக பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர். திட்டமிட்டபடியே இந்து முன்னணி சார்பில் போராட்டமும் நடைபெற்று முடிந்தது
போராட்டம் நடத்த அழைத்தபோதே 144 தடை உத்தரவை மீறி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஒன்று திரண்டார்கள் என்றால், மாநாடு என அழைத்தால் சர்வ நிச்சயமாக லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள் என்பதைத் தமிழக அரசு உணர்ந்திருந்தது. எனவே, மாநாட்டைத் தடுக்க நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ச்சியாக இடையூறுகளைச் செய்து வந்தது.
மாநாட்டை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு வேறு தொடரப்பட்டது. மாநாட்டிற்கு எதிரான அனைத்து முயற்சிகளும் மாநாட்டிற்கான இலவச விளம்பரமாகவே அமைந்தன. மாநாட்டு குறித்த தகவல்கள் தினந்தோறும் தவறாமல் தலைப்புச் செய்தியில் இடம்பெற்றன. மாநாட்டை நடத்த நீதிமன்றமும் பச்சை கொடி காட்டி விட்டது. இதனையடுத்து மாநாட்டுப் பணிகள் மேலும் வேகமெடுக்கத் தொடங்கின.
மாநாட்டிற்கான நாளும் வந்தது. சனாதன எதிரிகள் எது நடக்கக் கூடாது என எதிர்பார்த்தார்களோ அது நடந்தேறியது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மதுரையை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். இந்த படை போதாதென்று கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும், சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளி நாடுகளிலிருந்தும் முருக பக்தர்கள் திரளத் தொடங்கினர்.
all roads are lead to rome என்று பிரபல வாசகம் உள்ளது. அந்த வாசகம் நேற்று all roads are lead to Madurai என மாற்றப்பட்டது. விமானம், பேருந்து, ரயில், கார், இருசக்கர வாகனம் என அனைத்து வண்டிகளிலும் மக்கள் மதுரை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். பக்தர்கள் பயணிக்காத ஒரே வாகனம் கட்டை வண்டி மட்டும்தான்.
சிற்றூர்களில் இருந்து பேரூர்கள் வரை உள்ள மக்களைப் பாதுகாப்பாக மதுரை கொண்டு சேர்க்கும் பணியை பாஜகவினரும், இந்து முன்னணி அமைப்பினரும் ஏற்றுக்கொண்டனர். தனித் தனி குழுக்களை அமைத்து மக்களைப் பாதுகாப்பாக அவர்கள் மதுரை அழைத்து வந்தனர். மாநாட்டிற்கு பயணித்த பெரும்பாலான மக்கள் வழியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டபடி பயணத்தை மேற்கொண்டனர்.
மக்கள் பல்வேறு கோயில்களில் வேல்களை வைத்து வழிபாடு செய்து, அந்த வேலை முருக பக்தர்கள் மாநாட்டிற்குக் கொண்டு வந்தவண்ணம் இருந்தனர்.மறுபுறம், தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல், கடைசி வரை மாநாட்டிற்கு இடையூறு செய்ய போலீசார் முயன்றபடியே இருந்தனர்.
"மாநாட்டிற்குச் செல்லும் பக்தர்கள் நேராக மாநாட்டிற்கு மட்டும்தான் செல்ல வேண்டும். வழியில் உள்ள கோயில்களில் எல்லாம் வழிபாடு மேற்கொள்ளக் கூடாது." என மிகவும் விநோதமான கட்டுப்பாடுகளை எல்லாம் காவல்துறையினர் விதிக்க தொடங்கினர். இதனால், சில இடங்களில் போலீசாருடன் முருக பக்தர்களும் பாஜகவினரும், இந்து அமைப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மறுபுறம் மாநாடு நடைபெறும் பகுதியில் போதிய அளவில் போலீசார் பணியமர்த்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. மாநாட்டில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதால் அம்மா திடல் பகுதியில் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அதனை சரி செய்ய நூற்றுக்கணக்கில் போக்குவரத்து போலீசார் தேவைப்படுவார்கள். ஆனால், அந்த இடத்தில் சொற்ப அளவிலேயே போக்குவரத்து போலீசார் இருந்தனர்.
“ஆனால், இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. போக்குவரத்தை போலீசார்தான் சரி செய்ய வேண்டுமா? ஏன் எங்களால் சரி செய்ய முடியாதா?”
எனப் பச்சை வேட்டியை மடித்துவிட்டுக்கொண்டு இந்து முன்னணியின் தன்னார்வலர்கள் களமிறங்கினர். பல்வேறு பகுதிகளில் அவர்களாகவே போக்குவரத்தைச் சீர்படுத்தி பொதுமக்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் பயணிக்க வழி செய்தனர்.
மாலை 3 மணிக்கு மாநாடு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான நேரம் நெருங்க நெருங்க மக்கள் வருகை தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்தது. போடப்பட்ட அனைத்து நாற்காலிகளும் நிரம்பின. இடம் கிடைக்காதவர்கள் நின்றபடியே மாநாட்டைப் பார்க்கலாம் என முடிவெடுத்தனர். இதனால், மாநாட்டுத் திடலும் நிரம்பியது. இருந்தபோதும் இடம் போதவில்லை. எனவே, மாநாட்டுத் திடலுக்கு வெளியே நின்றபடியும் பலர் மாநாட்டு நிகழ்ச்சி கண்டு களித்தனர். அதற்கு ஏதுவாக பல இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஒட்டு மொத்த பக்தர்களும் எதிர்பார்த்த முருக பக்தர்கள் மாநாடும் தொடங்கியது. ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண், தமிழகத்தின் பல்வேறு ஆதீனங்கள், ஆன்மிக பெரியவர்கள், ஆர்எஸ்எஸ் தென் பாரத தலைவர் வன்னியராஜன், பாஜக தலைவர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எனப் பலர் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மாநாட்டின் முதல் கலை நிகழ்ச்சியாகப் பம்பை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநாட்டில் சிறுவன் சூரிய நாராயணன் தனது காந்தர்வ குரலால் முருகன் பாடலை பாடியதைப் பக்தர்கள் அனைவரும் மெய்மறந்து ரசித்தனர். பின்னர் சிவன், பார்வதி வேடமிட்டு கலைஞர்கள் நடனமாடியதைப் பக்தர்கள் அனைவரும் கண்டு ரசித்தனர். மேலும் மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளும் களைக் கட்டின.
நடைபெறுவது முருக மாநாடு. அப்படியென்றால் கந்த சஷ்டி கவசம் இல்லாமல் எப்படி?. ஆகவே, மாநாட்டில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட்டது. அதுவும் எப்படி? கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களையும் ஒரே நேரத்தில் சஷ்டி கவசத்தைப் பாடி செய்து சாதனை படைக்கப்பட்டது. பாராயணத்தின்போது மேடையில் அமர்ந்திருந்த பவன் கல்யாண் உள்ளிட்ட அனைவரும் தரையில் அமர்ந்து கந்த சஷ்டி கவசத்தை மனமுருகப் பாடினர்.
மாநாட்டில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம். முருகன் மலைகளைக் காக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும். இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும். சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இரவு 8 மணி வரை மாநாடு நடைபெற்றது. வழக்கமாக அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தினால் நேரம் ஆகஆக கூட்டம் படிப்படியாகக் குறையத் தொடங்கும். ஒரு கட்டத்தில் மாநாடு காத்து வாங்கத் தொடங்கும். இறுதியாக வேறு வழியின்றி காலி நாற்காலிகளை நோக்கி அரசியல் கட்சித் தலைவர்கள் ஆவேசமாக உரை நிகழ்த்தி கொண்டிருப்பார்கள்.
ஆனால், முருக பக்தர்கள் மாநாட்டில் கடைசி வரை எந்த நாற்காலியும் காலியாகவில்லை. மதிய நேரத்தில் நிலவிய கடும் வெயில், மாலை நேரத்தில் பெய்த சிறு மழை என எவற்றாலும் மக்கள் கூட்டத்தைக் குறைக்க முடியவில்லை.
அனைவரும் ஆடிப்பாடியும், அரோகரா கோஷமிட்டும், மேடையில் பேசியவர்களின் உரையைக் கேட்டு கரகோசம் எழுப்பியபடியும் கடைசி வரை சிறிதும் உற்சாகம் இழக்காமல் கொண்டாட்ட மனநிலையிலேயே இருந்தனர்.
இரவு 8 மணியளவில் முருக பக்தர்கள் மாநாடு நிறைவடைந்தது. ஒருநாள் நாள் எப்படி முடிந்ததென்றே தெரியவில்லை. ஒரு விடுமுறை தினத்தை, அதுவும் கிருத்திகை நாளை இதைக்காட்டிலும் வேறு எப்படியும் மிகவும் உபயோகமாகச் செலவிட்டிருக்க முடியாது.
பக்தர்கள் அனைவரும் மனநிறைவுடனும், முருகனின் பூரண அருளுடனும் தங்களுக்கு வீடுகளுக்குத் திரும்பிச்சென்றனர். அப்போது எந்த மாநாட்டிலும் நிகழாத அதிசயம் அங்கு நிகழத் தொடங்கியது. அரசியல் மாநாடுகள் நிறைவடைந்தவுடன் நாற்காலிகள் உடைக்கப்பட்டுக் கிடப்பதையும், வந்தவர்கள் அனைவரும் எனக்கென்ன என்ற மனநிலையில் திரும்பிச் செல்வதையும்தான் நாம் இதுவரை பார்த்திருப்போம்.
ஆனால் மதுரையில் நடந்து முடிந்தது முருக பக்தர்கள் மாநாடு. அங்குத் திரண்டவர்கள் முருக பக்தர்கள்.எனவே, மாநாடு முடிந்ததும் நாற்காலிகளை அங்குக் கூடியிருந்த மக்களை நேர்த்தியாக எடுத்து அடுக்கி வைத்தனர். குப்பைகள், காலி தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்டவற்றை இந்து முன்னணி அமைப்பினர் அகற்றி மாநாட்டுத் திடலைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மாநாடு சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது. எந்த குறையும் இல்லை. மிகுந்த மனநிறைவுடன் உறங்கச் சென்றுவிட்டு மறுநாள் காலை எழுந்து பார்த்தால் மீண்டும் அம்மா திடலில் பக்தர்கள் கூட்டம். என்னவென்று விசாரித்தால், அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களைத் தரிசிக்க வந்துள்ளதாகப் பக்தர்கள் தெரிவித்தனர். அந்த அளவுக்கு அம்மா திடல் முருக பக்தர்களை ஈர்க்கும் ஏழாம் படை வீடாக மாறியிருந்தது.
மாதிரி கோயில்கள் ஏற்கனவே அகற்றப்பட்டு விட்டதால், வந்த பக்தர்கள் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர். நடந்து முடிந்த இந்த ஒற்றை மாநாடு இந்து மக்களின் ஒற்றுமையைத் தமிழகத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளது. இனி இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், இந்துக்களுக்கு ஒரு இடையூறு என்றால் அவர்கள் அனைவரும் நிச்சயம் ஒன்றிணைவார்கள் என்பதையும் பலருக்குச் சொல்லாமல் சொல்லியுள்ளது இந்த மதுரை மாநாடு.