அதிபர் ட்ரம்ப்பிற்கு அதிகரித்த செல்வாக்கு : மக்களின் மார்க் என்ன?
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாடு, சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அதிகமான அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், அதிபர் ட்ரம்பின் செல்வாக்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
பதவி ஏற்று மூன்று மாதங்கள் முடிந்துள்ள நிலையில், அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகம் குறித்த கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. (Quinnipiac University )குயின்னிபியாக் பல்கலைக்கழகம், RealClearPolitics, CNN மற்றும் NBC ஆகிய நிறுவனங்கள், ட்ரம்ப் அதிபராக இருப்பதில் அமெரிக்கர்கள் மகிழ்ச்சியடைகிறார்களா ? என்று கருத்துக் கணிப்புகள் நடத்தின.
இதன் அடிப்படையில், ட்ரம்பின் மீது அமெரிக்க மக்களின் ஒப்புதல் மதிப்பீடுகள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட எல்லா கருத்துக் கணிப்புகளின் முடிவுகளும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. குறிப்பாக, ட்ரம்பின் ஒப்புதல் மதிப்பீடு 47 சதவீதத்தை எட்டியுள்ளது. இது முதல்முறையாக,ட்ரம்ப் பெற்ற மிக உயர்ந்த மதிப்பீடு ஆகும்.
2004 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை இல்லாத வகையில், நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக 44 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு நேர்மாறாக, 54 சதவீத அமெரிக்கர்கள் நாடு தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.
தனது இரண்டாவது பதவிக்காலத்தில் ட்ரம்ப், அரசின் செயல்திறன் துறையை (DOGE) உருவாக்கினார். இதற்கு எலான் மஸ்க்கை தலைவராக நியமித்தார். ட்ரம்பின் அதிரடியான இந்த நடவடிக்கைக்கு, ஜனநாயகக் கட்சியினரிடமிருந்தும் உட்பட அரசு ஊழியர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், 46 சதவீத மக்கள், அரசு செயல்திறன் துறை ஏற்படுத்தியது ஒரு நல்ல யோசனை என்று கூறியுள்ளனர். குடியரசுக் கட்சியினரிடையே ட்ரம்பின் ஒப்புதல் மதிப்பீடு 90 சதவீதம் ஆகும். அதே நேரத்தில், 4 சதவீத ஜனநாயகக் கட்சியினர் அவருக்கு ஆதரவாக உள்ளதாகக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இது, கடந்த 80 ஆண்டுகளில் ஒரு அதிபரின் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான மிகப்பெரிய ஒப்புதல் இடைவெளி ஆகும். உக்ரைன் மற்றும் நேட்டோ தொடர்பான அதிபரின் அணுகுமுறை சரியானது என்று 41 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லைப்பகுதிகளில் அவசர நிலை அறிவித்தது, சட்ட விரோதமாகக் குடியேறியவர்களைத் திருப்பி அனுப்பியது என ட்ரம்பின் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை 56 சதவீத மக்கள் ஆதரித்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை ட்ரம்ப் கையாளும் விதத்தை ஏற்கவில்லை என்று 54 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்பின் கொள்கைகள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக 40 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம், சுமார் 30 சதவீதம் பேர் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துவதாக நம்புகிறார்கள் இதற்கிடையில், அவரது கொள்கைகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று 28 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.
தனது அதிரடி அறிவிப்புக்களாலும், அதிர்ச்சி தரும் உத்தரவுகளாலும் சர்வதேச அரசியலில் புயலை ஏற்படுத்தி வரும் அதிபர் ட்ரம்ப்புக்கு ,உள்நாட்டில் மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதையே கருத்துக் கணிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.