சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள் - முடிவுக்கு வந்த 54 ஆண்டு கால குடும்ப ஆட்சி!
சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அதிபர் மாளிகையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால், அந்நாட்டில் 54 ஆண்டு கால குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது.
சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இத்லிப், அலெப்போ மாகாணங்கள் கிளர்ச்சியாளர்களின் கைவசம் சென்றன. இந்நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி ஆயுதமேந்தி முன்னேறிய கிளர்ச்சியாளர்கள், அதிபர் மாளிகையைக் கைப்பற்றினர்.
இதனால் அதிபர் பஷார் அல் அசாத் விமானத்தில் தப்பினார். அவரது விமானத்தின் ரேடார் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. இதனிடையே, அதிபர் மாளிகையைக் கைப்பற்றியதன் மூலம்சிரியாவில் கடந்த 54 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த அதிபர் பஷார் அல் அசாத்தின் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
பஷார் அசாத்தின் தந்தையான ஹபீஷ் அசாத், கடந்த 1971-இல் ஆட்சிக்கு வந்தார். அவருக்குப் பின் கடந்த 2000-இல் பஷார் அசாத் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அதிபர் பஷார் அல்- அசாத் அவசர அவசரமாக தனி விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறினார். அவரது விமானம் திடீரென ரேடார் உடனான இணைப்பை இழந்தது.
மேலும், லெபனான் வான் பரப்பில் 3 ஆயிரத்து 650 மீட்டர் உயரத்தில் பறந்த விமானம், திடீரென ஆயிரத்து எழுபது மீட்டருக்கும் கீழ் தாழ்வாக பறந்ததாகவும், அந்த விமானம் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் வெளியானது.