புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் மாநில தாய் மொழியை மேம்படுத்தும் வகையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம், மறைமலை அடிகள் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவில் இசை வித்வான் தட்சிணாமூர்த்திக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் விருது பெற்ற தட்சணாமூர்த்திக்கு பொன்னாடை அணிவித்து, பாராட்டு மடலை வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பத்மஸ்ரீ விருதாளர் தவில் இசை வித்வான் தட்சிணாமூர்த்தியுடன் இணைந்து “ஓம் நமசிவாய” என்ற பாடலை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையானது அந்தந்த மாநில தாய் மொழிகளை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது என தெரிவித்தார். மேலும் புதிய கல்விக்கொள்கை, இந்தி போன்ற குறிப்பிட்ட மொழியை திணிப்பதாக கூறுவது சரியல்ல எனவும் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் கூறினார்.