வெற்று விளம்பரங்களும், ஸ்டிக்கர்களும் நிறைந்த பட்ஜெட் - எல்.முருகன்
தமிழக அரசின் பட்ஜெட் வெற்று விளம்பரங்களும், ஸ்டிக்கர்களும் நிறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல் நடக்க உள்ளதால், 2026ல் முழு அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். வெற்று விளம்பர திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது தான். வழக்கம்போல் வெற்று அறிவிப்புகள் மட்டுமே பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ளன. தொழிற்பூங்காக்கள், தொழிற் பயிற்சி நிலையங்கள், தொழிற்பேட்டைகள் என பட்ஜெட்டில் அறிவிப்பு மட்டும் தான் உள்ளது. ஆண்டுதோறும் பட்ஜெட்டில் அறிவித்தால் போதுமா? திட்டங்களை செயல்படுத்துவது எப்போது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பல லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் 57 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார். அதேசமயம் அடுத்த ஓராண்டில் 40 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறுகிறார். இதை எப்படி அவர் செய்யப்போகிறார்? என்றும் அவர் வினவியுள்ளார்.
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய அதிமுக அரசு செயல்படுத்தி வந்த இந்த திட்டத்தை 4 ஆண்டுகாலம் முடக்கி வைத்துவிட்டு ஆட்சி முடியும் நிலையில் மீண்டும் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக கூறுவது. புதிய இளம் வாக்காளர்களை கவர்வதற்கான கேலிக்கூத்தே தவிர, இதனை வேறு எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநில சுயாட்சி பற்றி வாய்கிழிய பேசி வரும் திமுகவினர் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் இன்னும் பரவலாக்கப்பட வேண்டும் என்பது பற்றி ஏன் பேச மறுக்கின்றனர். தமிழில் கவர்ச்சியான பெயர் வைத்து பட்ஜெட்டில் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா? எதையும் செயல்படுத்த வேண்டாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்தீர்கள்.அது இன்னமும் வெற்று அறிவிப்பாக இருக்கிறது. திட்டங்களுக்கு பெயர் சூட்டுவதில் வித்தகர்களான திமுகவினர், அதனை செயல்படுத்துவதில் 'எத்தர்கள்.' கடந்த 4 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை? அதில் ஒன்று இரண்டாவது செயல்படுகிறதா என்பதை விளக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பு அள்ளிவீசிய வாக்குறுதிகளில், அறிவிக்கப்பட்ட ஒன்றிரண்டு கூட வெற்று அறிவிப்புகளாகவே இருக்கிறது. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், ஸ்டிக்கர் ஒட்டுவதில் பெயர் எடுத்த திமுகவினர் மற்றவர்கள் செய்த பணிகளில் தங்கள் ஸ்டிக்கரை ஒட்டி வருவது ஊர் அறிந்த ஒன்று. அதைத் தான் இப்போதும் செய்துள்ளனர்.
தமிழக அரசு பொருளாதார ஆய்வறிக்கை என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கை இதற்கு தகுந்த எடுத்துக்காட்டு உலக அளவிலும், இந்திய அளவிலும் தமிழகம் எந்தநிலையில் இருக்கிறது என்பதை அந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது. பல ஆண்டுகளாகவே தமிழகம் பல மாநிலங்களுக்கும் முன்னோடியாகவே திகழ்ந்து வருகிறது. சமூக முன்னேற்றம், தொழில் மேம்பாடு பொருளாதார வளர்ச்சி, தனிநபர் வருமானம் என பல்வேறு குறியீடுகளிலும் பல்லாண்டுகளாக தமிழகம் குறிப்பிடத்தக்க இடத்தில் தான் இருந்து வருகிறது.
இது ஒன்றும் புதிதல்ல. தமிழகம் வளர்ச்சி அடைந்திருப்பது உண்மைதான், ஆனால், இந்த சாதனைக்கு சொந்தகாரர்கள் ஒவ்வொரு தமிழரும் தான். தமிழ்நாடும். தமிழரும் இதற்காக பெருமைப்பட முடியும். இராஜாஜி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலங்களில் உருவாக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்புகளை தமிழகம் என்றென்றும் மறக்க முடியாது. இதற்கு, இதுவரை தமிழகத்தில் பொறுப்பில் இருந்த அனைத்து அரசுகளின் பங்களிப்பும் உள்ளது.
ஆனால், இந்த ஸ்டிக்கர் ஒட்டும் திருட்டு திராவிட மாடல் அரசு இதற்கு எப்படி பெருமைப்பட முடியும். திமுக அரசு பதவியேற்ற 4 ஆண்டுகளில் செய்த சாதனை என்ன? இந்த நான்கு ஆண்டுகளில் இந்த சாதனை பட்டியல் வந்து விட்டதா? இதற்கு முன்பு பல ஆண்டுகள் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி செய்தபோதும் இதே சாதனைப் புள்ளிகள் இருந்ததே? என்றும் எல்.முருகன கேள்வி எழுப்பியுள்ளார்.