DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!
DRDO உருவாக்கியுள்ள RUDRAM-1 ஏவுகணைமூலம், எதிரி நாடுகளின் ரேடார் அமைப்புகளைத் தாக்கி அழிக்கும் ANTI-RADIATION ஏவுகணை தொழில்நுட்பத்தில், இந்தியா தன்னாட்சியை அடைந்துள்ளது. சுகோய்-30 எம்.கே.ஐ ரக போர் விமானத்திலிருந்து ஏவப்படும் இந்த ரக ஏவுகணைகள் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம்வரை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது.
வான்வழி போர் நடவடிக்கைகளின்போது, எதிரியின் ரேடார் மற்றும் வான்வழி பாதுகாப்பு அமைப்புகளைச் செயலிழக்க செய்ய உருவாக்கப்பட்ட சிறப்பு ஆயுதங்களாக "ANTI-RADIATION MISSILES" உள்ளன. இவை எதிரிகளின் ரேடாரையும், வான்வழி ஏவுகணை கண்காணிப்பு அமைப்புகளையும் கண்டறிந்து தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சொந்த நாட்டு போர் விமானங்கள் பாதுகாப்பாகச் செயல்பட இந்த ஏவுகணைகள் வழிவகை செய்கின்றன.
இந்த வகை ஏவுகணைகள் SUPPRESSION OF ENEMY AIR DEFENCES அல்லது SEAD என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இந்த வகை ஏவுகணைகள் ரேடாரில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகளைக் கண்டுபிடித்து அதனை இலக்காகக் கொள்கின்றன. இந்த ஏவுகணைகள் ஏவப்பட்ட பின் ரேடார் அலைகள் நிறுத்தப்படாலும், மேம்பட்ட GPS மாடல் அல்லது INERTIAL NAVIGATION தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதனால் இலக்கைத் துல்லியமாக தாக்க இயலும்.
அதேபோல, சில ஏவுகணைகளில் இருதரப்பு தொடர்பு வசதி இருப்பதால், பறக்கும்போதே அதன் இலக்கை மாற்றவோ புதுப்பிக்கவோ முடியும். உலகம் முழுவதும் உள்ள ANTI-RADIATION ஏவுகணைகளில் அமெரிக்காவின் AGM-88 SERIES ஏவுகணைகளே மிக முன்னேற்றமானதாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் AGM-88E AARGM மாடல் ஏவுகணைகள் தனித்துவம் வாய்ந்தது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ரக ஏவுகணைகள் GPS வழிகாட்டி, மில்லிமீட்டர் அலை ரேடார் மற்றும் ரேடார் அலைகள் நிறுத்தப்பட்டாலும் இலக்கைத் தாக்கும் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளன. அமெரிக்காவின் உயர்ரக போர் விமானங்களான F-16 மற்றும் F/A-18 போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இந்த ரக ஏவுகணைகள், வான்வழி போர் தளங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேபோல, ரஷ்யாவின் KH-31P அல்லது AS-17 KRYPTON என்றழைக்கப்படும் ANTI-RADIATION ஏவுகணைகளும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன.
ஒலியின் வேகத்தைவிட வேகமாகப் பறக்க வல்ல இந்த ஏவுகணைகள், சுமார் 110 கிலோ மீட்டர் தூரம்வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாக உள்ளன. ரேம்ஜெட் இஞ்சின் மூலம் வேகத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் திறனும் இந்த ரக ஏவுகணைகளில் உள்ளதாகவும், இந்தியா பயன்படுத்தி வரும் சுகோய்-30 எம்.கே.ஐ போர் விமானத்தின் மூலமும் இந்த ஏவுகணைகளை ஏவ முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் புதிய Kh-58 UShKE ரக ஏவுகணைகள் 245 கிலோ மீட்டர்வரை சென்று தாக்கும் திறனைப் பெற்றுள்ளதுடன், பலவித ரேடார் அலைவரிசைகளைக் குறிவைத்து தாக்க வல்லதாக உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் பிரிட்டனின் ALARM ரக ஏவுகணைகள் உள்ளன. தனித்துவமான இந்த ரக ஏவுகணைகள் ரேடார் அணைக்கப்பட்டாலும், PARACHUTE மூலம் காத்திருந்து மீண்டும் இயக்கப்படும்போது திடீரென இறங்கி தாக்கும் திறன் கொண்டவை. அதேபோல, பிரான்ஸின் ARMAT ரக ஏவுகணைகளும் ரேடால் நிலையங்களைத் தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவும் தனது சொந்த ANTI-RADIATION ஏவுகணையான RUDRAM 1-ஐ உருவாக்கியுள்ளது. DRDO-வின் NEXT GENERATION ANTI-RADIATION MISSILE திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்ட இந்த ரக ஏவுகணைகள், சுமார் 150 கிலோ மீட்டர் முதல் 200 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கி இலக்கை அழிக்கும் திறனை கொண்டுள்ளது.
சுகோய்-30 எம்.கே.ஐ ரக போர் விமானங்கள் மூலம் ஏவப்படும் RUDRAM-1 ஏவுகணைகள், பலவித ரேடார் அதிர்வெண்களைக் கண்டறிந்து தாக்க வல்லது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக உருவாக்கப்பட்டு வரும் RUDRAM-2 மற்றும் RUDRAM-3 ரக ஏவுகணைகள் மேலும் நீண்ட தூரம் சென்று தாக்குவதுடன், பலவித விமானங்களுடனும் இணக்கமாகச் செயல்படும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகை ஏவுகணைகள் எதிரிகளின் கண்காணிப்பு அமைப்புகளை அழித்து, வான்வழி தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எளிதாக வழியமைக்கும் முக்கிய ஆயுதங்களாகப் பார்க்கப்படுகின்றன. இந்நிலையில், RUDRAM-1 உருவாக்கம் தன்னாட்சி அடிப்படையிலான ANTI-RADIATION ஏவுகணை தொழில்நுட்பம் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் போன்ற நாடுகளுள் ஒன்றாக இந்தியாவை உயர்த்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.