TRF- லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் : காஷ்மீர் தாக்குதல் சதி திட்டம் தீட்டியது யார்?
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப் பட்ட பயங்கர வாத தாக்குதலுக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான "தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்" பொறுப்பேற்றுள்ளது. அது பற்றிய விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப் பிரிவு, 2019 ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. அதே ஆண்டு, "தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்" அமைப்பு உருவானது.
லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத அமைப்புக்கள், இஸ்லாமிய மத அடையாளங்களையும் கொள்கைகளையும் கொண்டிருந்தன. இதைப் பாகிஸ்தான் விரும்பவில்லை.
காஷ்மீரில் தான் நடத்தும் தீவிரவாத செயல்களுக்கு மதச்சார்பற்ற இந்திய முகம் ஒன்று பாகிஸ்தானுக்குத் தேவைப்பட்டது. அதற்காகவே TRF உருவாக்கப்பட்டது.
தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்" இந்தியாவில் தடை செய்யப் பட்டுள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பாகும். சுதந்திரமான தனி காஷ்மீர் அடைவதே இந்த அமைப்பின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது.
முதலில், ஆன்லைன் அமைப்பாகத் தொடங்கப் பட்ட "தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்" ஏற்கெனவே இயங்கி வந்த தீவிரவாத அமைப்புகளின் கூட்டமைப்பாக உருவெடுத்தது.
ஷேக் சஜ்ஜாத் குல் தலைமையில் உருவான இந்த அமைப்புக்கு, தலைமை ஆபரேஷன் கமாண்டராக பசித் அகமது தர் உள்ளார். ஆரம்பத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் தீவிரவாதிகளே இந்த அமைப்பில் இருந்தனர்.
தெஹ்ரீக்-இ-மில்லத் இஸ்லாமியா மற்றும் கஸ்னவி ஹிந்த் போன்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளைச் சேர்த்துக்கொண்டு ஒரு முழுமையான தீவிரவாத அமைப்பாக வளர்ந்தது. ஜம்மு காஷ்மீர் மக்களை இந்திய அரசுக்கு எதிராகத் தீவிரவாத அமைப்புகளில் சேரத் தூண்டுவதற்காக சமூக ஊடகங்களில் உளவியல் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.
பாகிஸ்தானில் இருந்து ஜம்மு மற்றும் காஷ்மீருக்குள் ஊடுருவல், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றிலும் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
TRF-ஐ ஒரு உள்நாட்டு எதிர்ப்புப் படையாக நிலைநிறுத்த அதன் தலைவர் ஷேக் சஜ்ஜாத் குல்லை செயல்பட்டு வந்துள்ளார். 2021-ஆம் ஆண்டில் ஜம்மு இந்திய விமானப்படை நிலையத்தில் நடந்த இரட்டை ட்ரோன் தாக்குதல்களுக்கும், ஜம்மு காஷ்மீரில், ட்ரோன்கள் மூலம், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வீசிய பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கும் பின்னணியில் TRF இருக்கிறது.
2022 ஆம் ஆண்டில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் கொல்லப்பட்ட 172 தீவிரவாதிகளில், 108 பேர் "தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்" டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, 2023 ஆம் ஆண்டு ஜனவரியில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ், "தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்" பயங்கரவாத அமைப்பாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டு ,தடை செய்யப் பட்டுள்ளது. மேலும் அதன் தலைவர் ஷேக் சஜ்ஜாத் குல்லை தேடப் படும் தீவிரவாதியாக அறிவிக்கப் பட்டுள்ளார்.
மதச்சார்பற்ற இயக்கமாக ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், இதுவரை TRF நடத்திய தாக்குதலில் பொதுமக்களைக் குறிப்பாகக் காஷ்மீர் இந்துக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களைக் குறிவைத்தே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்திய ராணுவம் மீதும், காஷ்மீரின் லோக்கல் அரசியல்வாதிகள் மீதும் இதே இயக்கம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 22 ஆம் தேதி, காஷ்மீரில் உள்ள பகல் ஹாமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து TRF தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.
இந்த கொடூரமான தாக்குதலுக்கு, லஷ்கர் இ தொய்பாவின் தலைவராக உள்ள சைஃபுல்லா கசூரி என்ற காலித் சதித்திட்டம் தீட்டினார் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்பு, காலித் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள கங்கன்பூர் சென்றிருந்தார் என்றும் அங்குப் பாகிஸ்தான் ராணுவத்துடன் ஆலோசனை நடத்தினார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 2ம் தேதி, பாகிஸ்தானில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய காலித், இன்னும் ஓராண்டுக்குள் காஷ்மீரைக் கைப்பற்றப் போவதாகவும், பயங்கரவாத தாக்குதல்கள் தீவிரமாக்கப் படும் என்றும் உறுதியளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்தே, இப்போது, பகல் ஹாம் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போரில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள இளைஞர்களுடன் சேர்ந்து லஷ்கர்-இ-தொய்பா மற்றும் "தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்" தீவிரவாதிகள், காஷ்மீர் அல்லாத பிற மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்று NIA விசாரணையில் தெரியவந்துள்ளது.